February 16, 2019
தண்டோரா குழு
பணம் மோசடி உள்ளிட்ட பொருளாதார குற்றங்கள் நிதி திட்டத்திற்கு மட்டுமின்றி நாட்டின் நேர்மைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பொருளாதார குற்றங்கள் அதன் பரிமாணங்கள் மற்றும் இயக்கம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடெமியின் மண்டல மையத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான இக்கருத்தரங்க தொடக்க விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி,
ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது, அரசு இட ஆக்கிரமிப்புகள், பங்குச்சந்தை மோசடி, கள்ளச்சந்தை , கடத்தல், கலப்படம், கொள்ளை, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல், காப்பீடு மோசடி, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் சமூக பொருளாதார குற்றங்களாக உருவெடுத்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் White collar crimes உள்ளிட்டவைகளும் பொருளாதார குற்றங்களில் உள்ளடங்கும். இதுவரை பொருளாதார குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை என்றாலும், கடந்த 2014ல் தேசிய குற்ற ஆவண காப்பகம் 24 வகையான பொருளாதார குற்றங்கள் என சொல்லப்பட்டதில் வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது.
கணினி, கணினி தொழில்நுட்பங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு பொருளாதார குற்றங்களில் எளிதாக ஈடுபடுவதால், பொருளாதார வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு சாட்சியங்களை ஆராயவும் தொழில்நுட்பங்கள் பரிணாம் குறித்து நீதிபதிகள் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார்.