February 16, 2019
தண்டோரா குழு
திருச்சி விமான நிலையம் வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடலுக்கு தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற வாகனங்கள் மீது வெடிமருந்து நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவன் மோத செய்தான். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில், தமிழக வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தன. அப்போது அவர்களது உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, செளந்தரராஜன் திருச்சி, அரியலூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து சிவசந்திரனின் உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதே தனி விமானம் மூலம் மற்றொரு வீரரான சுப்பிரமணியத்தின் உடல் அங்கிருந்து மதுரை விமான நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.