February 14, 2019
தண்டோரா குழு
இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பணியிடத்துக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர். வரும் மே மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த புதிய நியமனம் செய்யப்படுள்ளதாக தெரிகிறது.
மூன்றாவது ஆணையர் பதவி கடந்த டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் தேர்தல் நடத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் கடும் பணிச்சுமையில் இருந்து வந்தது. தற்போது அந்த பதவிக்கு சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பணி அதிகரித்துள்ளதால், காலி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுசில் சந்திரா 1980 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறை பணியில் சேர்ந்தார். மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இப்போது தேர்தல் ஆணையராகி உள்ளார்.
இம்மாத இறுதிக்குள் மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.