February 13, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையை காயம் ஏற்படாமல் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். எனினும், மீண்டும் சின்னதம்பி யானை ஊருக்குள் திரும்பியது. இதனால், யானையை கும்கியாக மாற்றப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில், விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது அதனை துன்புறுத்தாமல் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, உடுமலை பகுதிகளில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், கடந்த சில நாளாக முகாமிட்டிருந்த இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இதனால் சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்தம்பி யானை தொடர்பான வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஒரு வாரமாக உடுமலை பகுதியில் சுற்றிவரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதே போல மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் வனத்துறையினர் சின்னதம்பி யானையை பிடித்து லாரியில் ஏற்றிச் செல்லும் போது அதனை துன்புறுத்த கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் அனுப்புவதா என பின்னர் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சின்னதம்பி யானையால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நீதிமன்றம் சின்னதம்பி யானையை பிடிக்க ஆணையிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.