February 13, 2019
தண்டோரா குழு
ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.
இதற்கிடையில், எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவின் போது முதலமைச்சர் பழனிசாமி ஒசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி தாக்கல் செய்தார். இதன் மூலம் ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகள் உதயமானது.
1962 ஆம் ஆண்டு ஊராட்சியாக இருந்த ஓசூர், பின் தேர்வுநிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 1992-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998-ல் சிறப்பு தேர்வுநிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது. தற்போது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது.முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக ஓசூரில் நாட்டில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்பேட்டை, டால் விமான நிலையம், ஐ.டி. பார்க் ஆகியவை ஓசூரில் உள்ளன.
அதைப்போல், கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில், 1920-ல் உருவாக்கப்பட்டது.1978-ல் தேர்வு நிலை,1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.
தற்போது 52 வார்டுகள் உள்ளன. 2011-ல், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகள், நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மொத்த மக்கள் தொகை 2.60 லட்சம்; பரப்பளவு, 49.10 சதுர கி.மீ. கடந்தாண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார்.தற்போது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது.