February 11, 2019
தண்டோரா குழு
ஜிஎஸ்டி மற்றும் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக புரிந்துகொள்ளக்கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஜிஎஸ்டி குறித்துmம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
தம்பிதுரை பேசுகையில் ” மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஜிஎஸ்டி மூலம் மாநில
அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் “ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது; அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக புரிந்துகொள்ளக்கூடாது” என தெரிவித்துள்ளார்.