February 11, 2019
தண்டோரா குழு
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இந்திய குடிமக்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ 15 நாள்களில் ஆஜராக வேண்டும் என
நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தெரிவித்துள்ளது.
மாற்றுக்கட்சி தலைவர்களை தாக்கி பதிவுகளை இடுவதும் அதற்கு எதிர்தரப்பினர் பதில் கருத்து தெரிவிப்பதுமான அரசியல் விமர்சனங்களும், அரசியல் நையாண்டிகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பதிவுகளில் பல, சம்பந்தப்பட்ட நபர்களின் சொந்த கணக்குகள் மூலம் வெளியிடப்படவில்லை போலியான கணக்குகள் மூலம் வெளியாகி வருகிறது எனவும் கூறப்படுகிறது. தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு பிப்ரவரி 11 ஆம் தேதி ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக வேண்டும் எனக்கூறி கடந்த 1 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. மிக குறுகிய காலத்தில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டி
பாராளுமன்றக்குழுவுக்கு பதில் அனுப்பிய டுவிட்டர் நிர்வாகம் ஆஜராக வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்குமாறு முன்னர் கோரி இருந்தது. அதன்படி அந்த ஆலோசனை கூட்டத்துக்கான தேதி 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தும் ‘ட்விட்டர்’ அதிகாரிகள் ஆஜராகவில்லை. இதுக்குறித்து கூறிய ‘ட்விட்டர்’ நிர்வாகம், தங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்தது.
இந்த விசியம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பின்னர் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தரப்பில் இருந்து மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகாத வரை, ட்விட்டர் நிறுவனம் சார்பில் எந்த ஒரு மற்ற அதிகாரிகளை சந்திக்கப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற குழு தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜாராக 15 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.