February 11, 2019
தண்டோரா குழு
கோவை புலியகுளத்தில் பிரபல ரவுடி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லியோ மார்டின். இவர் மீது கொலை மற்றும் அடி தடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. பிரபல ரவுடியான இவர் இரவு அலமேலுமங்கா லே அவுட் பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவுடி லியோ மார்டின் மதுபோதையில், புலியகுளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்ற இன்பிரண்ட்ராஜன், மற்றும் கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கு என்ற சண்முகம் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியதாக கூறுப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் ரவுடி லியோ மார்டினை கத்தியால் குத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.