November 27, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையின் எதிர்ப்புறம் இருக்கும் பைபாஸ் சாலையில் உள்ள குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்ற இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த நாகராஜ்(35). இவர் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மணிகண்டன் என்பவரும் பணி செய்து வருகிறார்.இதில் மணிகண்டனின் மனைவி கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாகராஜ் இவர்களைப்பார்க்க வந்துள்ளார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன் மற்றும் நாகராஜ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பிறகு அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் குளத்தோரத்தில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளனர். அப்போது நாகராஜ் திடீரென நிலைதடுமாறி குளத்தில் விழுந்தார்.இதில் அவருக்கு நீச்சல் தெரியாததாலும் மதுபோதையில் இருந்ததாலும் குளத்தில் விழுந்த உடன் நீரை குடித்து விட்டார். பின்னர் உடனிருந்த மணிகண்டன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்துவந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் குளத்தில் விழுந்த நாகராஜனை மீட்டனர். ஆனால் நாகராஜ் அதிக நீரை குடித்து விட்டதால் குளத்திலேயே இறந்துவிட்டார். சிறுநீர் கழிக்க சென்றவர் குளத்தில் விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.