November 17, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.செல்போன் கோபுரங்களும் சரிந்தன.சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது.மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின.இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள்.நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில்,கஜா புயலால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.புயல் பாதித்த 10 மாவட்டங்களில் 1,27,448 மரங்கள் விழுந்துள்ளன.புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றதாகவும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.