November 16, 2018 தண்டோரா குழு
இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதையடுத்து,தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா,திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால்,அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.இதற்கிடையில்,கடந்த 13ம் தேதி நாடாளுமன்றம் கூடியது.மகிந்த ராஜபக்சே,ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது,ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.எனினும்,அவை தொடங்கியது முதலே உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார்.கூச்சல்,குழப்பத்துக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.வாக்கெடுப்புக்குப் பின் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்தார்.
இந்நிலையில்,இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது.ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது சபாநாகயர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 19ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.