November 12, 2018 தண்டோரா குழு
சாலைகளில் எச்சில் துப்பினால் அதனை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என புனே மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அந்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இனி பொது இடத்தில் யாரேனும் எச்சில் துப்பினால் அவர்களே அதனை சுத்தம் செய்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் பொது இடத்தில் யாரேனும் எச்சில் துப்பினால் அவர்களே சுத்தம் செய்துவிட்டு அத்துடன் அபராதமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலும்,மாநகராட்சியின் கண்காணிப்பில் இதுவரை கடந்த 8 நாட்களில் 156 பேர் சிக்கியுள்ளனர்.அவர்கள் துப்பிய எச்சலை அவர்களே சுத்தம் செய்துவிட்டு ரூ.150 அபராதமும் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.இந்த நூதன தண்டனை மக்கள் சாலையை தூய்மையாக வைத்துகொள்ளவும் விழிப்புணர்வுக்காக மட்டுமே என்றும் மாநகராட்சி கூறியிருக்கிறது.புனே மாநகராட்சியின் இந்த நூதன முயற்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.