October 23, 2018
தண்டோரா குழு
சபரிமையில் நடைபெற்று வரும் போரட்டங்கள் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக சிறப்பு கமிஷ்னர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.இதையடுத்து கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தேவசாம் போர்டு சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அதில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தனர். மேலும் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீது நவ.,13ம் தேதி அன்று விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சபரிமலைக்கான சிறப்பு கமிஷ்னர் மனோஜ் கேரளா உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதில்,அடுத்த மாதம் திருவிழா நேரத்தில், சபரிமலையில் அதிகளவில் கூட்டம் கூடும். அப்போது,போராட்டம் தொடர்ந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போலீசார் பக்தர்கள் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.