October 23, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதால்,வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி,தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.11 லட்சம் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உத்தரவு உள்ளதாகவும்,இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பிளாஸ்டிக் சங்கத்தினர்,வியாபாரிகள் கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.பிளாஸ்டிக்கில் எதை தடை செய்ய வேண்டும் என்பதை அரசு அழைத்து பேச வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் எனவும்,பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்தி வருவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர்.ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தடை செய்து விட்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் தெரவித்தனர்.மேலும் மத்திய,மாநில அரசுகளால் வணிகர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.