September 26, 2018
தண்டோரா குழு
அரசியல் சாசனப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனிப்பட்ட ரகசியங்களை பெற்று,அவர்களுக்கு ஆதார் வழங்கியுள்ளதன் மூலம்,தனி மனித உரிமையை மீறும் செயல் எனக் கூறி ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் 5ல் 3 நீதிபதிகள் ஆதார் அடையாள அட்டை செல்லும் என இன்று (செப் 26)தீர்ப்பு வழங்கியது.
அதில்,கையெழுத்திலிருந்து கைரேகை வைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் நம்மை உயர்த்தியுள்ளது.கையெழுத்தைக் கூட மாற்றலாம் ஆனால் கைரேகையை மாற்ற முடியாது.ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது.அதேபோல் ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது.
சிபிஎஸ்இ,நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது.ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார்.பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.வங்கிக்கணக்குகளை தொடங்க,மொபைல் எண் பெற ஆதார் கட்டாயம் இல்லை.ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன.
மேலும் தனி நபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்.தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்பது சட்ட விரோதம்.இவ்வாறு கூறியுள்ளனர்.