September 21, 2018
தண்டோரா குழு
கோவை அருகே பாலியல் புகாருக்கு உள்ளான கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் இன்று புகார் அளித்துள்ளனர்.
கோவையை அடுத்த சரவணம்பட்டியில் SNS கலை அறிவியல் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியின் தாளாளர் சுப்ரமணியன் அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.அந்த பெண் ஊழியர் கல்லூரி அலுவலகத்திற்குள் வரும்போது முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஊழியர் புகார் அளித்தார்.சிறிது நேரத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளரை கண்டித்து எஸ்.எப்.ஐ மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை 3 மணியளவில் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து பெண் ஊழியர் மீண்டும் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரில் கல்லூரி தாளாளர் என்னிடம் ஆபாச வார்த்தைகளைக் கூறி தவறாக நடக்க முயன்றார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கடுமையான எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இந்த புகாரை அனைத்து மகளிர் போலீசார் பெற்றுக் கொண்டு புகாருக்கான ரசீது (CSR) வழங்கியதுடன் இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தமிழ் மாநில உறுப்பினர் ராஜேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட பெண்கள் தாமாக முன் வந்து கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளரை சந்தித்து பாலியல் தொந்தரவு அளித்த தனியார் கல்லூரி நிர்வாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.