• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு” ஊழலே காரணம் -மு.க.ஸ்டாலின்

September 11, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு” ஊழலே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள்,முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

சென்னையிலும்,மதுரையிலும்-ஏன் கிராமப்புறங்களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதும்,விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிப்பதும்,அ.தி.மு.க ஆட்சியில் இப்போதுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகம் அலங்கோலமாக மாறி,தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி,12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு;அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு;உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு;மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் “மெகா” ஊழல்; அதானி போன்ற தனியார் கம்பெனிகளிடமிருந்து “விண்ணுயர” விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தம்,மின் பொறியாளர்கள் மாறுதலுக்கு பதவி இடம் வாரியாக “ஊழல் தொகை”நிர்ணயம்; நியமனங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் – என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று,அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது.

நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால்,மின் உற்பத்தியில் மிகப்பெரிய தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது.“தேவைப்படும் 13260 மெகாவாட்” மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது.ஆகவே,3260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது. இப்பற்றாக்குறையைப் போக்க 1600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாலும்,இன்னும் 1500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மானக்கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மின் பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால்,பராமரிப்பு செலவுகளுக்கு பணமில்லாமல் தடுமாற்றம்,மின்பகிர்மானக் கழகத்திற்குத் தேவையான கேபிள்கள் கூட வாங்க இயலாமல் தவிப்பு,மின் திட்டங்களை விரைவில் நிறைவேற்றி முடிக்க முடியாத நிர்வாகத் திறமையின்மை போன்ற “கருப்பு அத்தியாயம்”,மின் பகிர்மானக் கழக வரலாற்றில் ஊழல் அமைச்சர் திரு தங்கமணியின் நிர்வாகத் திறமையின்மையால் எழுதப்படுகிறது.

அதனால்,விரைவில் கடுமையான மின் வெட்டை சந்திக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழக மக்கள் இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.அதனால்,“மின் தேவை”யை சமாளிக்க “பராமரிப்பு” “ஃபால்ட்” என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள்” என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும்,அதை முன்னிட்டே திடீர் திடீரென்று,தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி,மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

அ.தி.மு.க ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்து,மக்களுக்கு “வெளிச்சம்” தரும் மின் பகிர்மானக் கழகத்தையே “இருட்டுக்குள்” தள்ளியிருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும்,இன்றைய அமைச்சர் தங்கமணியும் மக்களுக்கு மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

மக்கள் தலையில் தாங்க முடியாத மின் கட்டணங்களைச் சுமத்தி வைத்து டெண்டர்கள் மூலம் தாராளமாக கொள்ளையடித்துள்ளார்கள்.இந்நிலையில் நேற்றைய தினம் “மின் உற்பத்தி” குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும்,உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும்,அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் திரு தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும்,வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆகவே,பராமரிப்பு (Maintenance) என்ற போர்வையிலும்,ஃபால்ட் (Fault) என்ற போர்வையிலும் மக்களையும்,விவசாயிகளையும்,சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களை” உடனடியாக கைவிட வேண்டும் என்றும்,மின்பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க உருவாக்கியுள்ள “நிதி நெருக்கடியை” நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி,மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க