September 10, 2018
தண்டோரா குழு
கோவை பூ மார்க்கெட் பகுதியில்,பூ வியாபாரி ஒருவரை கடத்தி பணம் பறித்த அதே பகுதியில் நடைபாதை வியாபாரம் செய்து வரும் வியாபாரியின் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூ மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் விஷ்ணு என்பவர் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டதுடன் 50 லட்சம் ரூபாய் கேட்டு அவரது தந்தை கோவிந்தராஜன் மிரட்டப்பட்டார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் கடத்தலில் ஈடுபட்டதாக அதே மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரம் செய்து வரும் பிரபு,சந்தோஷ்,தினகரன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
அதில் சகோதரர்களான பிரபு மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இதனிடையே கடந்த சில தினங்களாக பிரபு மற்றும் சந்தோஷின் தந்தையான வேலுச்சாமி மீண்டும் அதே இடத்தில் நடைபாதை கடை அமைத்து வியாபாரம் மேற்கொண்டு வருகிறார்.இதையடுத்து நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பூ மார்க்கெட் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாபாரத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.ஆனால் சக வியாபாரியை கடத்தி அவரிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்ததுடன்,மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தவரின் கடையை உடனடியாக அப்புறப்படுத்தும் வரை தாங்கள் மார்க்கெட்டிற்குள் சென்று வியாபாரத்தைத் தொடங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் அனைவரும் பூ மார்க்கெட் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.