September 7, 2018
தண்டோரா குழு
எலிக்காய்ச்சலை தடுக்க தமிழக கேரள எல்லையில் உள்ள 18 எல்லை கிராமங்களிலும் கடுமையான சோதனை செய்யப்பட்டு வருதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி கூறுகையில்,
“எலிக்காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்று தான்.யாரும் பீதி அடையவோ கவலைப்படவோ அவசியமில்லை.சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும் எனவும்,தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.குடிநீரிலும் குலோரினேசன் செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.கோவையில் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும்,கேரளா சென்று வருபவர்களுக்கு தான் எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துள்ளோம்.எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட உத்தரவிட்டுள்ளதாகவும்,தமிழக கேரள எல்லையில் உள்ள 18 எல்லை கிராமங்களிலும் கடுமையான சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும்,கிணத்துக்கடவை சேர்ந்த சதீஷ் உயிரிழப்பிற்கு காரணம் அவர் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான்,காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனே தெரிவிக்ககோரி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்”.