September 4, 2018
தண்டோரா குழு
வன்முறைக்கு இடமில்லை என்று சொல்லும் அரசியல் கட்சிகள் சோபியாவின் செயலை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணைப் பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி,‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டு அவரிடம் பிரச்சனை செய்தார்.இதைத் தொடர்ந்து,தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும்,தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து,தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில்,சோபியா மீது காவல்துறையினர் 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில்,தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.எனினும், மாணவி சோபியா கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில்,தமிழக பாஜக துணைப் பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“ஜனநாயகத்தில் “வன்முறை”-க்கு இடமில்லை என்று சொல்லும் அரசியல் கட்சிகள் சோபியாவின் செயலை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.எங்கள் மீதான “விமர்சனத்தை” மட்டுமல்ல எங்கள் இயக்க சகோதரர்களின் படுகொலைகளையும் ஜனநாயக ரீதியாகவே எதிர்கொண்டிருக்கிறோம்”. எனக் கூறியுள்ளார்.