August 30, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140 பேர் காணவில்லை என்றும்,தற்போது வரை 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேரளாவில் நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.