August 27, 2018
தண்டோரா குழு
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி,முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து தற்போது கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 30ந் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் நினைவு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,பரூக் அப்துல்லா,குலாம் நபி ஆசாத்,தேவகவுடா மற்றும் டெரிக் ஒ பிரையன் மற்றும் ஏராளமான தேசிய,தமிழக தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இதற்கிடையில்,கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதனால் இந்நிகழ்வில் அமித்ஷா கலந்துக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில்,சென்னையில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,முரளிதர ராவ் கலந்து கொள்கின்றனர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.இதன் மூலம் இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.