August 21, 2018 தண்டோரா குழு
தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காதில் பூ வைத்து இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழு தேசிய பஞ்சாலை கார்ப்பரேசன் இயங்கி வருகின்றது.இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு குறித்து தொழிற்சங்க தலைவர்கள் தேசிய பஞ்சாலை கார்ப்பரேசன் இயக்குனரிடம் பேசி முடிவெடுப்பார்கள்.
மேலும் பஞ்சப்படி,வீட்டு வாடகை படி,பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு,தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குதல்,இரவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்புத்தொகை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.சி,ஏ.டி.பி உள்ளிட்ட சங்கங்கள் டெல்லியில் தேசிய பஞ்சாலை இயக்குனரிடம் பேசியதில் ஆகஸ்ட் 16,17 ஆம் தேதிகளில் தமிழகம் வந்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால்,இதுவரை அவர் பேச்சு நடத்தவில்லை எனவும்,தமிழகத்திலுள்ள 7 பஞ்சாலைகளின் நிர்வாகியும் பேசாத காரணத்தால் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.மேலும் நாளை முதல் கோவையிலுள்ள ஏழு தேசிய பஞ்சாலைகளில் பணிபுரியும் 4000 தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.