August 16, 2018 தண்டோரா குழு
வாஜ்பாய்க்கு பகைவர்களே இல்லை என்பது தான் அவருடைய தனிச்சிறப்பு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,வாஜ்பாய் மறைவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மறைவு குறித்து பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவில் ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது.வாஜ்பாய் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல.அவருக்குப் பகைவர்களே இல்லை என்பது தான் அவருடைய தனிச்சிறப்பு” எனக் கூறியுள்ளார்.