August 16, 2018
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து மொத்தமுள்ள 90 அடியில் 88 அடிவரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்ததால் இன்று காலை வினாடிக்கு 30000கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து தற்போது மிக அதிகமாக 35000கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.இதனால் பாதுகாப்புகருதி அணையிலிருந்து 35000 கன அடிநீரும் உபரிநீராக வெளியேற்றபட்டு வருகிறது.
இந்நிலையில் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றபட்டு வரும் சூழலில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிமக்கள் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ கால்நடைகளை கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 அழைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.