August 13, 2018
தண்டோரா குழு
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. கலைஞர் 50 ஆணடில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர். தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. எம்ஜிஆரையும், சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியது கலைஞர் வசனம் தான். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். கருணாநிதியை பின்பற்றி அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர். ஆனால் அவரால் பல நூறு பேர் அரசியல் தலைவர்களாக உருவாக்கப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது கவர்னர்லிருந்து மற்ற மாநில முதல்வர்கள், தலைவர்கள் மெரினாவில் இருக்கும் பொழுது.. தமிழ்நாட்டின் முதல்வர் அங்கு இல்லாதது சரியா..???
ஏன் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை? எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட இப்போது பதவியில் இருப்பவர்கள் பெரிய ஆட்களா? கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தை கண்டு பிரமித்து போனேன்.என்றென்றும் நன்றி மறக்காதவர்கள் என்பதை கலைஞருக்கு வந்தகூட்டம் திருபித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏற்றி திமுக தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.