August 11, 2018
தண்டோரா குழு
கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உதவுவோம் எனவும் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகியை நலம் விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று(ஆகஸ்ட் 11)வருகை தந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவரான கருணாநிதி,கேரள மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார் எனவும்,அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கேரள மக்கள் மழையால் சொல்லொனா துயரத்திற்கும் பயத்திலும் ஆழ்ந்துள்ள நிலையில்,அரசியல் வித்தியாசங்கள் குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும்,மத்திய அரசின் உதவியில்லாமல் மீட்பு பணிகளை செய்துவிட முடியாது எனவும்,மத்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்,மீட்பு பணிகளுக்கு பிறகு புணரமைப்பிற்காக தேவைப்படும் நிதி குறித்து மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கும் எனவும் அதனை வழங்க அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்தும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேரள அரசிற்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.