August 7, 2018
தண்டோரா குழு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,
பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். மேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இம்மனு இன்று நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு ஒரே நாளில் மாற்றிய நிலையில், ஓராண்டாக உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் உத்தரவு ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி, தமிழக அரசு, டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.