August 4, 2018
தண்டோரா குழு
கோவை விடுதி உரிமையாளர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட , விடுதி காப்பாளர் புனிதா உடந்தயாக செயல்பட்டதாக விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தர்ஷணா பெண்கள் விடுதியில் , தங்கி உள்ள பெண்களை அவ்விடுதி காப்பாளர் புனிதா தவறாக வழி நடத்துவதாகவும், விடுதி உரிமையாளர் ஜகநாதன் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட புனிதா உடந்தையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் 3 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் விடுதி உரிமையாளர் ஜகநாதன், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஜகநாதன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விடுதி காப்பாளரை காவல்துறையினர் தேடி வந்த சமயத்தில் இம் மாதம் 1 ஆம் தேதி கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில் நேற்று புனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்த மனுவில், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றே விசாரணை முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் புனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதில் புனிதா சென்னையில் தலைமறைவாக இருந்ததாகவும், விடுதி உரிமையாளர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட புனிதா உடந்தையாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் ஒப்புக்கொண்டாதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பணத்திற்காக புனிதா மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து,நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட புனிதாவை வருகின்ற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புனிதா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.