July 28, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நாபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அங்கு உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.இதையடுத்து இன்றும் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனையில் காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத்,முகுல் வாஸ்னிக் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்,
“கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க நானும்,முகுல் வாஸ்னிம் அவர்களும் சென்னை வந்தோம்.தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தோம்.கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவர் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் சில தினங்களில் கருணாநிதி நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என நினைக்கிறேன்.
கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது.அவரது உடல் நிலை சரியாக பிரார்திக்கின்றோம்” எனக் கூறினார்.