July 26, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள,எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று துவங்கியது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள,எம்.சி.ஏ படிப்புகளில் டான்செட் மதிப்புகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.அதன்படி இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று எம்.சி.ஏ படிப்புகளுக்கான கலந்தாய்வு கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் துவங்கியது.எம்.சி.ஏ கலந்தாய்விற்காக மொத்தம் 1552 பேர் அழைக்கபட்டு உள்ளனர்.வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் இன்று மட்டும் 666 மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து,எம்.பி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல்,ஆகஸ்ட் நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.