July 25, 2018
தண்டோரா குழு
கோவையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குளத்தில் மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை அடுத்த பனமரத்தூர் அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் செல்வாம்பதி குளம் உள்ளது. தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நிறைந்துள்ளது.
இந்நிலையில் குளத்தின் ஓரத்தில் தலை,கைகள்,மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் நீரில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து,தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்,கொலை செய்யப்பட்ட பெண் யார் எந்த ஊரை சார்ந்தவர்,யார் அவரை கொலை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.