July 24, 2018
தண்டோரா குழு
கோவை சுங்கம் பகுதியிலுள்ள வாலாங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் குளங்களில் அதிக அளவில் மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கோவை உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் மீன்கள் கிடைத்து வந்தன.இதனிடையே இன்று காலை கோவை சுங்கம் அருகே அருகேயுள்ள வாலாங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதை கண்ட மீனவர்கள் உடனடியாக இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது மாநகராட்சி பகுதியில் இருந்து கழிவுநீர் நேரடியாக வாலாங்குளத்தில் கலந்து விடுவதாகவும் சில நேரங்களில் வேதிக் கழிவுகளும் கலப்பதால் மீன்கள் செத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து எந்தப் பகுதியிலிருந்து கழிவுகள் கலக்கின்றன என்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதனிடையே கோவை மாநகர மீனவர்களின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் உக்கடம் பெரிய குளம்,வாலாங்குளம்,குறிச்சி குளம்,சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட குளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.