July 24, 2018
கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக விடுதி உரிமையாளர் மற்றும் காப்பாளர் மீது காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது.இந்த பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகளும்,வேலைக்கு செல்லும் பெண்களும் என 200க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.பீளமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் காப்பாளராக புனிதா என்பவர் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த பெண்கள் விடுதியில் உள்ள கல்லூரி மாணவியர் சிலரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காப்பாளர் புனிதா,பிறந்தநாள் பார்ட்டி என கூறி வெளியில் அழைத்து சென்றுள்ளார்.அங்கு மாணவியருக்கு மது விருந்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.இந்த தகவல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மத்தியில் வெளியானதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளின் பெற்றோரும்,உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.இதனையடுத்து காவல்துறை அங்கு வரவே விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவானார்.
விடுதி காப்பாளர் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் விடுதிக்குள் சென்று அங்கு தங்கி இருந்த மாணவிகளை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை காப்பாளர் புனிதா தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்,வாட்ஸ் அப் காலில் விடுதியின் உரிமையாளர் ஜெகதீசன் அரை நிர்வாணமாக லைனில் இருக்கும் போது அவரிடம் பேச சொல்லி மாணவிகளை வற்புறுத்தியதாகவும்,கட்டிட உரிமையாளர் ஜெகநாதன் பிறந்தநாள் பார்டிக்கு மது அருந்த சொல்லி வற்புறுத்தியதும் தெரியவந்தாகவும், விடுதியில் பெரும்பாலும் காப்பாளர் புனிதா மதுமயக்கத்தில் இருந்ததாக மாணவிகள் தெரிவித்ததாக மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.