July 20, 2018
தண்டோரா குழு
போலி செய்தியை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனம்,பார்வேர்டு மெசேஜ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும்,கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பல பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே,அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து,ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.இது போன்ற செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில்,வாட்ஸ் ஆப்பில் பார்வேர்டு தகவல்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது தவிர போலி செய்திகளை கட்டுப்படுத்த வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து பல்வேறு கேள்விகளுடன் தங்களது 2 வது நோட்டீசை வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அரசு அனுப்பியுள்ளது.
இதனையடுத்து,பார்வேர்டு தகவல் என்பதை காட்டும் வசதி கொண்டு வரப்படும் என அரசிடம் வாட்ஸ் ஆப் உறுதியளித்திருந்தது.ட்ஸ் அப் தகவல்கள் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் முக்கிய செய்தித்தாள்களில் ஒரு பக்க விளம்பரமாக வாட்ஸ் ஆப் வெளியிட்டிருந்தது.மேலும்,மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,வாட்ஸ் ஆப்பில் வரும் பார்வேர்டு தகவல்களை குறைந்தபட்சம் ஐந்து முறை மட்டுமே மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வதற்கான உரிமையளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,போலி செய்தியை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனம்,பார்வேர்டு மெசேஜ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்றிலிருந்து குறிப்பிட்ட மொபைல் நம்பரிலிருந்து ஒரு மெசேஜை 5 முறை மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும்.5-வது முறைக்கு மேல் அந்தக் குறிப்பிட்ட மெசேஜை பார்வேர்டு செய்ய இயலாது.இது வாட்ஸ் ஆப் உபோயகப்படுத்தும் எல்லோருக்கும் பொருந்தும்.
எனினும்,மெசேஜ்களை 5 தடைவைக்கு மேல் பார்வேர்டு மட்டுமே தான் செய்ய முடியாது.மற்றபடி குறிப்பிட்ட மெசேஜின் எழுத்துகளை காப்பி செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்புவதும் சுலபம்.
ஆகையால் மக்களும் அரசாங்கமும் மனது வைத்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் வதந்திகளையும்,போலி செய்திகள் பரவுவதையும் தடுக்க முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.