July 19, 2018
தண்டோரா குழு
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என தேவசம் போர்டு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்,10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து,இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை ஆரம்பத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி,5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து,இவ்வழக்கின் விசாரணை நேற்று முதல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த ஆண்களை போல் பெண்களிக்கும் சம உரிமை உள்ளது.இறைவழிபாடு என்பது ஆண்களைப்போல் பெண்களுக்கும் பொருந்தும்.அதை ஒரு சட்டம் சார்ந்து நீங்கள் செயல்படுத்த முடியாது.பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து இதுவரை வலுவான காரணம் சொல்லப்படவில்லை என நீதிபதி சந்திரசூட் கூறியிருந்தார்.
இந்நிலையில்,இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது,இன்றைய விசாரணையின் போது சபரிமலை தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது.அதில்,சபரிமலையில் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது.மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிட்டது.