July 2, 2018
தண்டோரா குழு
கோவை காந்தி பார்க் அடுத்த பொன்னையராஜபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாமஸ் வீதி,ராஜவீதி,தர்மராஜா கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 1100 கிலோ எடையிலான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர்.அதன் தொடர்ச்சியாக கோவை காந்தி பார்க் அடுத்த பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் அந்த வீட்டில் மூன்று அறைகளில் மூட்டை மூட்டையாக பான் மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 மூட்டைகளிலான ஹான்ஸ் புகையிலை,10 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பான் பாக்கு,22 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வி.1 புகையிலை,18 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கூல் லிப் எனப்படும் புகையிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் ஷர்வான்குமார் என்ற வடமாநில வாலிபர் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.எனினும் அவர் மீது சந்தேகமடைந்துள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வீட்டின் உரிமையாளர் யார் என்பது விசாரணை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.