June 30, 2018
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தெற்கு மண்டல காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் முனீஸ்வரன் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் என்பவர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடையவுள்ளதாக ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து,முனீஸ்வரன் நீதிமன்றத்திற்குள் புகுந்து சந்தோஷை கைது செய்தார்.இதற்கு திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் நீதிமன்ற பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில்,இது தொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆய்வாளர் முனீஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தனர்.இந்த புகாரை பார்த்த தலைமை நீதிபதி,சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் செயலுக்கு அரசு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் தெற்கு மண்டல காவல் துறைக்கு இன்று ஆய்வாளர் முனிஸ்வரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக தெற்கு மண்டல காவல் துறையில் பணிக்கு சேரும் படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.