June 26, 2018
தண்டோப்ரா குழு
நாட்டின் எந்த பகுதியில் வசித்தாலும்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க,’பாஸ்போர்ட் சேவா’ எனப்படும் புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல விரும்புவர்கள் தங்கள் மாநிலத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் இல்லாத நிலையில் அண்டை மாநிலங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதைபோல் மாநிலத்துக்குள்ளேயும் சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால்,சில நூறு கிலோமீட்டர் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழலும் இருந்து வருகிறது.இதனால் பாஸ்போர்ட் விண்ணபிக்க பலரும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில்,நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் “பாஸ்போர்ட் சேவா” ஆப் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
இது குறத்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
“பாஸ்போர்ட் சேவா” ஆப் மூலம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் மக்கள்,பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம்.அந்த ஆப்பில் குறிப்பிடப்படும் முகவரியில் போலீசார் சரிபார்ப்பார்க்கப்பட்டு அந்த முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும்.இந்த புதிய நடைமுறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும்,சுலபமாகவும் முடியும்.நாடு முழுவதும்,லோக்சபா தொகுதி ஒன்றுக்கு ஒன்று வீதம் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உள்ளனர்.அவர்களுக்கு இந்த ஆப் உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்”.