June 20, 2018
தண்டோரா குழு
காவல்துறையினர் தாக்கப்படும்போது மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதற்கிடையில்,காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறைபடுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன்,முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது,தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,ஆர்டர்லி முறை குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும்,ஆணையம் அமைப்பது தேவையில்லை என்பது குறித்து விரிவாக வாதிடுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது,ஆர்டர்லி முறையை விரும்பும் காவலர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் மற்ற காவலர்கள் போல் கஷ்டப்பட்டு பதவி உயர்வு அடைய வேண்டாம் என அவர்கள் நினைக்கிறார்கள். காவலர்களை காவல் பணிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.காவல் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு செய்து கொள்ளவும்.
குற்றவாளிகள் தாக்கப்பட்டால் மட்டும் மனித உரிமை மீறல் என கொதிப்பது ஏன்?காவல்துறையினர் தாக்கப்படும்போது மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்?எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள்.சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்கான நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு வழக்கறிஞர்களும், காவலர்களும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததும் வெட்கக்கேடானது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.