June 15, 2018
தண்டோரா குழு
அரசு பேருந்துகள் சரியான முறையில் பாராமரிக்கப்படாத காரணத்தால் தான் உதகையில் பேருந்து விபத்து ஏற்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
உதகையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர்,
பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவையில் 15 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் உடல் நலம் தேறி வீட்டுக்கு சென்றுள்ளதாகவும்,இருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும்,வால்பாறையில் சிறுத்தை தாக்கிய பெண்ணிற்கும்,கூடலூரில் யானை தாக்கிய ஒருவருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும்,விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கவும் மருத்துவக் குழுவிற்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 900 பேருக்கு விபத்துக்களால் உண்டான பாதிப்புகளுக்கும், இயற்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல விபத்தில் இறந்த மற்றும் காயமுற்றவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.