June 13, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மரம் நடும் திட்டத்தில் மோசடி செய்ததாக 2 வனத்துறை அதிகாரிகள் மீது கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு மாபெரும் மரம் நடும் திட்டம்,பசுமை வீடுகள் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது.தமிழகத்தை பசுமையாக மாற்றுவதற்காக வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டன.
அதன்படி 2011-ம் ஆண்டு முதல் 2019 வரையான 8 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.668.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதுமட்டுமின்றி சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் மரங்கள் நடப்பட்டன.வனப்பகுதிகள் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் நடந்த மரம் நடும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து,லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை மண்டல வனத்துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.கோவை மண்டலத்திற்குட்பட்ட 16 தொகுப்பு கிராமங்களில் 1.7 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இதற்காக ரூ.33.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் 12 போலி பில்களை 2 வனத்துறை அதிகாரிகள் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.