June 12, 2018
தண்டோரா குழு
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்காக பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களை அப்புறப்படுத்த நிர்பந்திக்கக்கூடாது,திட்டத்தின் வரைப்படத்தை வெளியிட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி உண்ணாவிரதம் மற்றும் கையெழுத்து இயக்க போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உக்கடம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த போராட்டம் தொடர்பாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கூறும்போது,உக்கடம்-ஆத்துப்பாலம் வரை மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிப்பதை கருத்தில் கொண்டு,கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ஒப்பணக்கார வீதி,உக்கடம் முதல் ஆத்துப்பாலம் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால்,தற்போது அத்திட்டம் வட்டப்பாதை வடிவமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவரும் தகவலின்படி ஒருபோதும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியாது என்றும், காந்திபுரத்தில் கட்டப்பட்ட வீணாக்கப்பட்ட பாலத்தின் நிலைதான் இப்பாலத்திற்கும் ஏற்படும் என்றனர்.
மேலும்,பால திட்டத்திற்காக சுமார் 120ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வரும் துப்புரவு பணியாளர்கள்,சலவை தொழிலாளர்கள் உள்ளடக்கிய ஆயிரத்து 650 குடும்பங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருவதாகவும்,அவர்கள் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அந்தப்பகுதியிலேயே கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.