June 9, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனிய கலவை இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. ஆனால் இந்த அளவை விட பலமடங்கு யுரேனியத்தின் அளவு இந்திய நிலத்தடி நீரில் உள்ளதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடிநீரில் யுரேனியம் அதிகமாக இருந்தால் பல உடல் உபாதைகள், நோய் தாக்குதல், உடல் உறுப்புகள் செயலிழப்பதும் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யுரேனியக் கலப்பு அதிகரிப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.