May 23, 2018
தண்டோரா குழு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்பட்ட ஆயிரத்து மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கன்வில்கர், நவீன்சின்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து, தமிழக அரசு கடந்த 21ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வகைமாற்றம் செய்யப்பட்ட சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை திறக்க இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேற்கொண்டு எதிர்மனுதாரர் ஏதேனும் விளக்கம் கேட்கவோ, மேல்முறையீடு செய்யவோ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.