May 12, 2018
தண்டோரா குழு
கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
கர்நாடாகவில் 224 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதைபோல் கடைசி நேரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதிக்கான தேர்தல் வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 27-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. களத்தில் 2,636 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் ஆண் வேட் பாளர்கள் 2,417 பேரும், பெண் வேட்பாளர்கள் 219 பேரும் உள்ளனர்.
மேலும், தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 222 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 61.25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடக தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.