April 11, 2018
தண்டோரா குழு
சத்தீஷ்கர் மாநிலத்தில் சார்ஜ் போட்டு செல்போனில் வீடியோ கேம் விளையாடிய போது செல்போன் வெடித்ததில் சிறுவன் பலியானான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.பெரியவர்களை விட சிறுவர்களை அதிகமாக விளையாடி வருகிறார்கள்.அப்போது செல்போனில் சார்ஜ் குறைந்துவிட்டால் சார்ஜ் போட்டுக் கொண்டே அதில் இருக்கும் ஆபத்தை உணராமல் சிலர் விளையாடுகிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலம் சோன்வான் குத்ராப்பரா கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுவன் ரவி.கடந்த திங்களன்று இரவு செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தான்.நீண்ட நேரம் விளையாடியதால் செல்போனில் சார்ஜ் குறைந்து கொண்டே போனது.இதனால் மின்சார பிளக்கில் சார்ஜ் போட்டப்படியே விளையாட்டை தொடர்ந்தான்.அப்போது,ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி திடீரென்று வெடித்தது.இதனால்,சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.அதைபோல் அவனுடன் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில்,சிறுவன் ரவிக்கு காயம் அதிகம் இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.ஆனால்,ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் காரணமாக சிறுவனை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் சிறுவன் ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.மற்றொரு சிறுவனுக்கு லேசான காயம் என்பதால் உயிர் தப்பினான்.செல்போன் வெடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சத்தீஷ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.