April 5, 2018
தண்டோரா குழு
மான்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் பகுதியில் “ஹம் சாத் சாத் ஹே“ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகா் சல்மான் கான் 2 கலைமான்களை சுட்டுக் கொன்றதாகவும், அவருடன் துணை நடிகா்கள், நகைகள் உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுக்காக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் நீதிமன்றம், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. பின்னர்,இவ்வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்திருந்தது.ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து,நேற்று சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து இன்று தீர்ப்பையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சாயிப் அலிகான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்போது, நடிகர் சல்மான்கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மற்றவர்கள் விடுவித்தது.
மேலும், இந்த வழக்கில் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.