April 2, 2018
தண்டோரா குழு
மத்திய பிரதேசத்தில் கருப்பாக இருந்த குழைந்தையை வெள்ளையாக்க தாய் கருங்கல்லில் தேய்த்த கொடுமை நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
தத்தெடுக்கும் போதே குழந்தை கருப்பாக இருந்ததால் சுதா அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலை கருங்கல்லில் வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
இந்த கொடுமையை பார்த்த சுதாவின் அக்கா மகள் குழந்தை நல அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சுதாவின் வீட்டிற்கு சென்ற குழந்தை நல அமைப்பினரும், போலீசாரும் குழந்தையை மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து குழந்தை உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் சுதா, அந்த குழந்தையை சட்டவிதிகளுக்கு புறம்பாக தத்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியை சுதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தை, குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.