March 30, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து,மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
47 வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், கிராமத்தின் நடுவே மொத்தமாக சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு ஆலையை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.